சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது .
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் 37-வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. இதில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வரும் 30ம் தேதி வரை மட்டும் இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற 36 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 42,61,685 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15ம் தேதி வரை கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,52,580 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48,39,813 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது .
அதேபோல் , செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுளள்து .
இதையும் படிங்க: “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!
இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசியும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42,35,939 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர் என்றும் இவர்களில் 6,04,042 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி, வரும் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை விலையில்லாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுளள்து .
எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நாளை நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பம்-இனிப்புகளை அறிமுகப்படுத்திய ஆவின்