தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனம் பிரத்யேகமாக 9 இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 9 இனிப்பு வகைகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்துள்ளார்.
அப்போது அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:
தீபாவளிக்கு சிறப்பு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் இந்த சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த இனிப்பு வகைகள் ரூ.85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகபடுத்தபட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா இனிப்பு வகைகளும் தனியார் விற்பனை நிறுவனங்களை ஒப்பிடும் போது 20% குறைத்து தான் விற்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாக தான் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!
மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்கிறது; மத்திய அரசு நேர்முகமாக 5% சதவீதம் ஜிஎஸ்டியை உயர்த்துகிறது; மறைமுகமாக 20% சதவீதம் உயர்த்துகிறது; அதனால் தான் தமிழ்நாடு அரசும் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
பால் விலையை குறைத்ததன் காரணமாக, ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 225 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
ஆவினில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். தீபாவளிக்கு இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.