சென்னை ஜாம் பஜாரில் பீடா கடையில் போதைப்பொருள் கலந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிற இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஜாம் பஜார் பகுதியில் பீடா கடை ஒன்றில், சாக்லேட் போதைபொருள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், அந்தக் கடைக்கு சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பீடா கடையில் சாக்லேட்டில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்தக் கடையில் இருந்து 7 கிலோ சாக்லேட் போதைப்பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, விற்பனை செய்தவரை கைது செய்தனர். மேலும், விற்பனை செய்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் யாதவ் என்பதும் அவர் பீகாரிலிருந்து சாக்லேட் போதை பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
சாலையில் கட்டிப் பிடித்த படியே சென்ற காதல் ஜோடி! வைரலான காணொளி