அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்த பின்பு உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிபதியை நாடவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.
பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நபர் அமர்வை அணுகலாம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதை பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.
அதுபோல அதிமுக கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.
இருவரது வாதத்தையும் கேட்ட தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின், உயர் நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை- உச்சநீதிமன்றம்