ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறிவிக்கப்படாத தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது, சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. பொதுக்குழு தொடர்பாக எந்த ஒரு உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கப்பபோவதும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவுக்கும், உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், பொதுக்குழு குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, சென்னை உயரிதிமன்ற தனி நீதிபதி அமர்வை நாடலாம் எனக் கூறியுள்ளது.