துணை மேயர், ஆணையர் முதல் அனைத்து அதிகாரிகளும் களப்பணியாற்றி வருகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதலே தீவிரமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்னையில் மழை பெய்த இடங்களில் மழையில் நனைந்தபடியே பார்வையிட்டார். அப்போது, அவர் மழைநீர் தேங்கியுள்ள இடங்கள், அவற்றை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், மழைநீர் வடிகால் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பிரியா ராஜன் பேசினார்.
அவர் கூறியதாவது;
போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளோம். வடகிழக்கு பருவமழை தொடங்கி இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை 10 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. துணை மேயர், ஆணையர் முதல் அனைத்து அதிகாரிகளும் களப்பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் அவர்களது வார்டுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மழை அதிகளவில் பெய்தாலும், மழைநீர் வெளியேற்ற வடிகால்கள் சரியான முறையில் உதவிசெய்யும். இதுதான் மழைநீர் வடிகால் பணிகளின் ரிசல்ட்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 8 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியது உறுதி