கிருஷ்ணகிரி மற்றும் தரும்புரி மாவட்டத்தில் ‘காவிரி தெற்கு சரணாலயம்’ அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி, 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ என்று அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாகும். இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வன உயிரின சரணாலயம், மலைமாதேஸ்வரா வன உயிரின சரணாலயம், காவிரி வன உயிரின சரணாலயம், மலைமாதேஸ்வரா வன உயிரன சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் – உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் – ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது.
இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்ட உயிர்பன்மைமிக்க பகுதியாக காணப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர் நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.
I’m happy to announce that the GoTN has notified ‘Cauvery South Wildlife Sanctuary’ as the 17th Wildlife Sanctuary in TN. This significant step along with the TN Green Climate Company’s missions will go a long way in conserving the rich biodiversity of our State. pic.twitter.com/oaMiGLw6bh
— M.K.Stalin (@mkstalin) November 8, 2022
மேலும், இந்த சரணாலயம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..