காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் உரிய அனுமதியின்றி கேஜிஎப் 2 திரைப்பட பாடலை பயன்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா என 5 மாநிலங்களைக் கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் இந்தப் பயணம் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி இந்த நடைபயணத்தின் போது கேஜிஎப் 2 திரைப்பட பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளியிட்டது.
இந்தச் விவகாரம் தொடர்பாக, எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்களின் அனுமதியின்றி திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-த்தின் கீழ் 403,565,120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடா யாத்திரை ஆகிய இரு ட்விட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…