நட்சத்திர ஜோடியான சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என்றாலும், இந்தியாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர், சானியா மிர்சா. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். ஒரு இந்திய விளையாட்டு வீரர், பாகிஸ்தான் விளையாட்டு வீரரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அக்காலக்கட்டத்தில் பெரும் பேசுபொருளாய் மாறியது.
சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஜோடி பெரும் நட்சத்திர ஜோடியாக பலராலும் கொண்டாடப்பட்டு வந்தனர். இந்நிலையில், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எற்பட்டு, இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்தத் தகவல்கள் குறித்து சானியா மிர்சாவும் சரி, சோயிப் மாலிக்கும் சரி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சில நாள்களுக்கு முன்பு, சானிய மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ‘கடினமாக நாட்களை கடந்து செல்ல உதவும் தருணங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
சானியா மிர்சாவின் இந்த பதிவால் சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஜோடிக்கு இடையே விரிசல் உள்ளதாக மீண்டும் அதிகளவில் பேசப்பட்டது. இந்த பேச்சே இன்னும் ஓயாத நிலையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ‘ உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன..அல்லாவை தேடி’ என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு இன்னும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த பேச்சுகள் குறித்து இதுவரையிலும், சானியா மிர்சாவும், சோயிப் மாலிக்கும் எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘அடேய்..கேமராமேன்’ – கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ஃபன் சம்பவம்