திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், வேங்கிக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு, 215 சதுர அடி என பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறையினர், அமைச்சர் வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும் உத்தரவிட்டிருந்தது, இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியிருப்பதாலும் அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆட்சியரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். முன்பு தெரிவித்தது போலவே அறிக்கை சமர்பிக்கும் வரை, கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் , தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை ஆகியோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
காதல் டூ கல்யாணம்: இனி ஆதியும் நிக்கி கல்ராணியும் தம்பதிகள்!