கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது, கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் உணவு பண்டங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், இன்று கோவை நகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து மொத்த விற்பனை பழக்கடைகளில் சோதனை இட்டனர்.
இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயன பொடி மூலம் பழுக்க வைத்த சுமார் 12½ டன் மாம்பழம் மற்றும் 2½ டன் சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். பழங்களின் மொத்த எடை 15 டன் ஆகும்.
மேலும் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழம், சாத்துக்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?