தில்லியில் நேற்று காற்றின் தரம் மிக மோசமான நிலையில் பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தீபாவளி கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதேபோல், தலைநகர் தில்லியிலும் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி வெடிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், 6 மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தில்லில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் காற்றின் தரத்தின் சராசரி தரவுகளின்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரக் குறியீடு 312 அதாவது மிகவும் மோசமான வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளான இன்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தில்லியும் அதைத்தொடர்ந்து, லாகூரும் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தீபாவளி அதாவது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தில்லியின் காற்று தரம் மிகவும் மோசமான காற்றின் தரக் குறியீடு எண் 382 பிரிவில் இருந்தது.
மேலும் தில்லியின் மிக நெருங்கிய நகரங்களான காஜியாபாத் (301), நொய்டா (303), கிரேட்டர் நொய்டா (270 ) குருகிராம் (325) மற்றும் பரிதாபாத் (256) ஆகிய நகரங்கள் மோசமான காற்றின் தரம் மற்றும் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சூரியகிரகணம்: தமிழகத்தில் எப்போது , எங்கெங்கு தெரியும்? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் என்னென்ன ?