‘ஃபியோனா’ புயலால் கனடா கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அட்லாண்டிக் கடலில் சமீபத்தில் உருவான சக்திவாய்ந்த புயலுக்கு ‘ஃபியோனா’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த ‘ஃபியோனா’ புயலானது கனடா நோக்கி நகர்ந்தது.
இதையடுத்து, கனடா வானிலை ஆய்வு மையம் கனடா வரலாற்றில் ‘ஃபியோனா’ புயல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தற்போது கனடாவை ‘ஃபியோனா’ தாக்கியுள்ளது.
இதையும் படிங்க : நேருக்கு நேராக மோத உள்ள சிறுகோளும் விண்கல்லும் – எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள செப்.27
‘ஃபியோனா’ புயலால் நோவா ஸ்கோடியோ (Nova Scotia) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு (Prince Edward) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதுமட்டுமல்லாது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஃபவுண்ட்லேண்ட் (Newfoundland) மற்றும் லாப்ரடரில் (Labrador) உள்ள பல வீடுகள் சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளன.
பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.