‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்து இயங்காது- தமிழ்நாடு அறிவிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 08-12-2022 நாளிட்ட அறிவிக்கையில், நேற்று (07.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 முடிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “மாண்டஸ்” புயல் சின்னம் காரணமாக – கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் மாண்டஸ் புயல் எதிரொலியாக அனைத்து அதிகாரிகளும் மாவட்ட தலைநகரங்களில் இருக்க வேண்டும்.
புயலின் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் இரவு நேர பேருந்து இயக்கக் கூடாது.
பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது, மாவட்ட நிர்வாகத்துடன் துறைச்சார்ந்த இயக்குனர்கள் அவ்வபோது தகவலை கேட்டு அறிய வேண்டும்
என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்