ஊருக்குள் புகுந்து பட்டியலினத்தவர் மீது தாக்குதல் அந்தாதியை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர், செங்குணம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். கட்டட தொழிலாளியாக இவர் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கும் அதே பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஜெய்சங்கர் என்பவருக்கும் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று பிரச்னைக்குரிய அந்த இடத்தில் சந்திரசேகரன் மாட்டுக் கொட்டடை அமைத்துள்ளார். இதன் காரணமாக கோபம் அடைந்த ஜெய்சங்கர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை அழைத்து சந்திரசேகரை அடிக்குமாறு பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி இளைஞர்கள் சில பேர் கம்பு, கட்டைகளுடன் சந்திரசேகரின் ஊருக்குள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சந்திர சேகரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காணொளியில், சந்திரசேகரனை தாக்கும்போது சாதி பெயரை கூறுவதோடு, அவர்களை தடுக்க வந்த பெண்களிடம் சாதி பெயரை கூறி அந்த இளைஞர்கள் கோபத்தை காட்டுகின்றனர்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போளூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போளூர் டி.எஸ்.பி குமார் கூறுகையில், தாக்குதல் நடத்திய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தாக்குதலுக்கு காரணமான வழக்கறிஞர் ஜெய்சங்கர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில இளைஞர்களையும் அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்! கோவை பெண் சாதனை