இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஒருநாள் தொடரில், சுப்மன் கில் 360 ரன்கள் எடுத்தார். சிராஜ் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் முதலிடத்தில் இருந்த டிரெண்ட் போல்டைப் பின்னுக்குத் தள்ளி சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார் . சிராஜ் முதல்முறையாக இந்தப் பெருமையை பெற்றுள்ளார். அதேபோல, பேட்டர்களுக்கான ஒருநாள் போட்டி தரவரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளார் இளம் வீரர் சுப்மன் கில்.
மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் போட்டியில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி, 1578 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 31 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 2 சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இருபது ஓவர் தரவரிசையில் 900 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை; சென்னையை சேர்ந்த கலைஞர் அசத்தல் சாதனை!