மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான ‘இன்கோவாக்’ நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதிலும் தடுப்பூசி வாயிலாகவே கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்தை வெவ்வேறு விதங்களில் செலுத்த முன்னெடுப்பானது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், மூக்கின் வாயிலாக செலுத்துதல் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளும் அடங்கும்.
இந்த முன்னெடுப்புகளில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‘இன்கோவாக்’ கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்தது. இதை அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த இன்கோவாக் மருந்து நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்தை தில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார்.
இந்த ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்தை இரு தவனைகளில் செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் மற்றும் இரண்டாவது தவணையின்போது செலுத்திக்கொண்ட கொரோனா தடுப்பூசிக்கு மாறாக, மூன்றாவது தவணையின்போது (பூஸ்டர்) மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம்.
இந்த மருந்தானது அரசுகளுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும், தனியாருக்கு ஜிஎஸ்டியுடன் ரூ.800- க்கும் விற்பனை செய்யப்படுமென பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமாரை சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவித்த ஐசிசி; சிராஜ் முன்னேற்றம், கோலி பின்னடைவு!