சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மோசடிக்கு உதவிய 400 இந்திய ஆடிட்டர்கள் மீது ஒன்றிய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. லடாக் எல்லையில் அத்துமீறி வரும் சீன ராணுவத்தால் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தது முதல், சீனா உடனான வர்த்தக உறவை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் செயல்படும் அந்நாட்டு நிறுவனங்களின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அவற்றின் நிதி பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீதும் சீன தயாரிப்புகள் சார்ந்தும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. எனினும், சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் போலி நிறுவனங்கள் தொடங்கும் முயற்சியை மேற்கொண்டுவந்தனர். இவர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த பட்டயக் கணக்கர்கள், நிறுவனச் செயலர்கள் உதவி வழங்கிவருவதாக மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தபடி இருந்தன.
அதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களை நிறுவி செயல்பட்டு இருப்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த ஆடிட்டர்கள் உதவி செய்து இருப்பதும் இந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 400க்கும் மேற்பட்ட ஆடிட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மும்பை துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் ‘பரிசு பொருள்’ என்ற போர்வையில் ஏராளமான கன்டெய்னர்கள் சீனாவிலிருந்து வந்திறங்கி, இந்தியச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதையும், இந்த வரி ஏய்ப்பு மோசடி சுமார் 2 ஆண்டு காலம் நடந்து வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தாங்கள் வரி ஏய்ப்பு அல்லது மோசடி எதிலும் ஈடுபடவில்லை என்றும், வரி தொடர்பான விஷயங்களில் உள்ளூர் சட்ட விதிகளைப் பின்பற்றுமாறு தங்களது பொருள்களை விற்கும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சீன இ-காமர்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும், அதிகாரிகள் சீனப் பொருட்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம்!
பிச்சை புகினும் கற்கை நன்றே; பிச்சைக்காரராய் இருந்த மாணவர் பத்தாம் வகுப்பில் சாதனை!!