உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பிச்சை எடுப்பத்திலிருந்து மீட்கப்பட்ட ஷேர் அலி எனப்படும் சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
ஆக்ராவில் சுற்றுச்சூழல் ஆரோக்கியமற்ற பகுதியில் வசித்து வருபவர் ஷேர் அலி. அவர் வசிக்கும் பகுதியில் வாழும் பலரும் குப்பைகள் பொருக்குதல், பிச்சை எடுத்தல் போன்ற தொழில்களைச் செய்தே வாழ்க்கையினை நகர்த்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் வசித்து வந்த நரேஷ் பராஸ் என்னும் குழந்தைகள் நல ஆர்வலர், ஷேர் அலியினை பிச்சை எடுப்பதிலிருந்து மீட்டுள்ளார். மேலும் ஷேர் அலி படிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
8க்கு 8 அடி அளவுள்ள அறையில் தனது பெற்றோர்கள் மற்றும் எட்டு சகோதரர்களுடன் ஷேர் அலி வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு மின்னிணைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வினை ஷேர் அலி எழுதியிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று உத்தரபிரதேச கல்வித் துறையானது தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது.
இந்த தேர்வில் 63 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஷேர் அலி தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் அதிக பட்சமாக ஆங்கிலப் பாடப்பிரிவில் நூற்றுக்கு எண்பது மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளர்.
நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷேர் அலி, ‘எனது மதிப்பெண்கள் எனக்கு நம்பிக்கையினைக் கொடுத்துள்ளன. ஒரு உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் செல்வதற்கான உத்வேகத்தினை இந்த தேர்வு முடிவுகள் எனக்கு கொடுத்துள்ளன.’ என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய ராணுவப்பணியில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும், ராணுவப் பணியானது தனது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொள்ள ஒரு சிறந்த வழியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
17 வயதாகும் ஷேர் அலி, அவர் வாழும் பகுதியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர் என்கிற பெருமையினைப் பெற்றுள்ளார். ஷேர் அலியினை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போது பல மாணவர்களும் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
உடல் நலம் குன்றினாலும், பள்ளிக்குச் செல்வதினை ஷேர் அலி நிறுத்தியது இல்லை என்று அவர் தாய் பெருமிதத்துடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனை பேர் தலைமை வகித்தாலும் பாஜகவின் கைப்பாவைதான் அதிமுக – ஈவிகேஎஸ். இளங்கோவன்