தில்லியைச் சேர்ந்த 40 வயது பெண் உத்தரபிரதேசம் காசியாபாத்தில் கடத்தப்பட்டு 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியைச் சேர்ந்த 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற பகுதிக்கு சென்றார்.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தில்லி திரும்புவதற்காக இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றார். அப்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்தப் பெண்ணை கடத்தி சென்றனர்.
பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பாலியல் ரீதியாக அந்தப் பெண் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்தப் பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தில்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் 4 பேரை கைது செய்தனர். இன்னும் ஒரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வன்கொடுமை செயலில் 5 பேரும் அந்த பெண்ணுக்கு பழக்கம் உடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இரும்பு கம்பி சொருகப்பட்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்ததை காவல்துறையினர் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட கொடூரர்கள் 5 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த புதிய மாற்றம்