சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 5-வதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கடந்த 13-ம் தேதி கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த கொள்ளையில், ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்கள் வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அதே கிளை ஊழியர் கொரட்டூர் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன. அதைச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை காவல்துறையினர் திங்கள் கிழமை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் இருந்த 4 பேரையும் காவல்துறை தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாகவே, இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அரும்பாக்க கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
பொம்மையை வைத்து வித்தைக் காட்டிய திருடன்.. திகைத்த காவல்துறை – வைரலான சம்பவம்!