இரண்டு முறை விண்ணில் ஏவப்படுவதிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலம் புயல் எச்சரிக்கை காரணமாக தற்போது மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தின் பெயரே ஆர்டெமிஸ். இந்த திட்டத்தின் மூலம் நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
நாசா, கடந்த 1969-ம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் அனுப்பியது. இதையடுத்து, 2019-ம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா தொடங்கியது.
இதையும் படிங்க: நேருக்கு நேராக மோத உள்ள சிறுகோளும் விண்கல்லும் – எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள செப்.27
ஆர்டெமிஸ் திட்டத்தின்படி, நாசா இந்த ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியும் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையும் ராக்கெட் ஏவுதல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27-ம் தேதி விண்ணில் ஏவத் தயாராக இருந்த ஆர்டெமிஸ் ராக்கெட்டானது தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக விண்ணில் செலுத்தப்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ராக்கெட் ஏவப்படுவதற்கான தேதி குறித்து உறுதியான தகவல்களை நாசா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.