Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு  நிறைவு விழா;  டிச.15-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக்...

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு  நிறைவு விழா;  டிச.15-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள்

    பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருங்கள், நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமியுங்கள் என திமுக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு – தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்,
    தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.ராசா, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குபிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :-

    திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் , “7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” நேற்று (30.11.2022) அறிவித்தார். அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், 19.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இந்தக் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

    தீர்மானம் : 2

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு – தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்!

    கூட்டத்தில் பேசிய செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,

    திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்ட காலங்களில், கொள்கையுணர்வு சிறிதும் குன்றாமல், இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை சுமந்திருந்த கருணாநிதிக்கு உற்ற துணையாக நின்று, தோள் கொடுத்துக் காத்தவர் அன்பழகன். பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் – பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர். நம் திமுக தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘பெரியப்பா’ எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் அன்பழகன்.

    தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

    “முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று பேராசிரியர் பெருந்தகை அவர்களின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

    இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளான 19-12-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் இனமானப் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமின்றி கழக அமைப்புகள் உள்ள மாநிலங்கள் அனைத்திலும், கழக உணர்வாளர்கள் உள்ள இடங்கள் தோறும், இல்லங்கள் தோறும் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் புகழ் ஒளி பரவிடச் செய்வோம். அந்த நன்னாளில் நாடெங்கும் முழங்கட்டும் திராவிடக் கொள்கை முரசம் உள்ளிட்ட 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 29 மாவட்ட செயலாளர் பேசியுள்ளனர்.

    கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,

    கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம் இந்த முறை நடைபெற உள்ள தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும் அதற்கான கட்டமைப்பை இப்போது இருந்து துவக்குங்கள்.பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருங்கள், நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து நியமியுங்கள்.கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் வலுவான கூட்டணியுடந்தான் நாம் போட்டியிடுவோம்.கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    புதிதாக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன, அணிகளில் புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும், சிறப்பாக பணியாற்றுங்கள்.
    அரசினுடைய திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை கண்காணியுங்கள் என தெரிவித்தார். அமைப்பு மற்றும் அணிகள் சார்பாக தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்‌ என தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டு பார்க்க எங்களை அழைக்க மாட்டீர்களா? – நீதிபதியின் கேள்விக்கு தமிழக அரசின் பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....