ஒன்பது ரூபாய் நோட்டு வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சமூகவலைதளத்தில் அத்திரைப்படம் குறித்து பேசி வருகின்றனர்.
சத்யராஜ் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்து பலதரப்பையும் நெகிழ வைத்த ஒரு திரைப்படம்தான், ஒன்பது ரூபாய் நோட்டு. தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்து குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் வழியே விவசாய பிரச்சினைகளையும் இத்திரைப்படம் பேசியது. 2007-ஆம் ஆண்டின் மனதிற்கு நெருக்கமான திரைப்படங்களுள் ஒன்றாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில், தற்போது இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதைமுன்னிட்டு, இயக்குநர் தங்கர் பச்சான் இத்திரைப்படம் குறித்து தனது எண்ணத்தை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, அவர் தெரிவித்துள்ளதாவது:
எனது 25-ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது.
எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.
சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்தப் பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
பரத்வாஜ் இசை, வைரமுத்து பாடல்கள், லெனின் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் அனைத்துமே ஈடு இணையற்றவைகள். தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம்.
நான் மட்டும் நினைத்தால் அவைகள் நிறைவேறாது. எழுத்தில் உயிர் வாழ்ந்த ஒன்பது ரூபாய் நோட்டு உயிர் ஓவியமாக, திரைப்படமாக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மருத்துவர் கணேசன் அவர்களை என்றென்றும் மறவேன்.
இவ்வாறாக தெரிவித்தார்.
மேலும், நடிகர் சத்யாராஜ் தெரிவிக்கையில், ‘பொதுவாக நான் நடித்த படங்களை கலைஞர் கருணாநிதி பார்த்து நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார். இந்தப் படத்தை பார்த்து கலைஞர் எழுந்திருக்காமல் உட்கார்ந்தேயிருந்தார். அவர் அருகில் நின்றேன். அமைதியாக இருந்தார்.
என் கையைப்பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். நானும் கலங்கிவிட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்; ‘என்னை அழ வைச்சுட்டியே’ என கட்டியணைத்தார். தங்கர் பச்சானை கட்டியணைத்து பாராட்டினார். இப்படியான கலைஞரை நான் பார்த்தில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமூகவலைதளத்திலும் பலர் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் 15 வருடங்கள் கடந்ததை நினைவுகூர்ந்து நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் வருகிற சனிக்கிழமை பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும்; முதன்மை கல்வி அலுவலர்