தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில் துப்பாக்கி முனையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சச்சின் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லெனின் – மேத்யூ, சச்சின் இரு கும்பல்களாக கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு சம்பவங்களில் இந்த 2 கும்பலுக்கும் இடையில் மோதல் நடந்து வந்தது.
இப்படி நடந்த சண்டை ஒன்றில் கடந்த வருடம், லெனின் கும்பல் மேத்யூ இருக்கும் இடத்தில் புகுந்து தாக்கியது. சினிமாவில் சித்தரிப்பதை போன்றே கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்த சண்டையில் மேத்யூ – சச்சின் கும்பலை சேர்ந்த அபிஷேக் என்பவரை லெனின் கொலை செய்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, லெனின் தம்பி ஆலனை கொலை செய்ய வேண்டும் என்று மேத்யூ – சச்சின் கும்பல் தயாராக திட்டமிட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு ஆலனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தில் புகுந்து ஆலனை கொலை செய்து விடுவோம் என ரவுடிகள் மூலமாக மேத்யூ – சச்சின் கும்பல் சவால் விட்டது.
இந்த தகவலின் அடிப்படியில், விக்ரம் திரைப்படத்தில் வருவது போலவே காவல்துறையினர், மப்டியில் துப்பாக்கியுடன் சென்று அந்த திருமண அரங்கில் பாதுகாப்பு கொடுத்தனர்.
சுமார் 50 காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அந்த மேத்யூ – சச்சின் கும்பலும் அங்கே இருந்தது. விக்ரம் திரைப்படத்தில் இண்டர்வெல் சீனில் வருவது போலவே, இங்கும் பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது. மேத்யூ – சச்சின் ஆகியோரை சுட்டு பிடிக்க காவல்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர்களின் ஆட்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்து இருந்தார்கள். மேத்யூ – சச்சின் ஆகியோர் வரவில்லை.
அதிக அளவில் காவல் பாதுகாப்பு இருந்ததால், அன்று அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. திருமணத்தை உடனே முடித்துக்கொண்டு தம்பதிகளை காவல்துறையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனிடையே சச்சின் – மேத்யூ இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
சச்சின் – மேத்யூ இருவரும் தாம்பரம் சாய்ராம் கல்லூரி அருகே இருக்கும் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் காட்டு பகுதிக்கு சென்று சச்சினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சச்சின் காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்துள்ளான்.
தற்காப்பு கருதி காவல்துறையினர் அவனை முழங்காலுக்கு கீழே இரண்டு முறை சுட்டு பிடித்துள்ளனர். இதையடுத்து, அந்த ரவுடி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது சோமங்கலம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் குவிக்கப்பட்ட 4000 போலீஸ்! பிஎப்ஃஐ தடை உத்தரவால் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு….