இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில்,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர் நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் ஆட களமிறங்கியது.
தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சஹார் வீசிய முதல் ஓவரிலேயே பவுமா டக் ஆவுட் ஆக, அதற்கடுத்த ஓவரில் டிகாக் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார். இதன்பின்பு, மில்லர், டிர்ஸ்டன் என அடுத்தடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது விக்கெட்டுகளை இழந்தது.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் புதுமாற்றம்…..
தென்னாப்பிரிக்க தரப்பில் மர்க்ராம், பர்னேல், மஹாராஜ் முறையே 25, 24, 41 ரன்களை எடுத்தனர். இதனால் அந்த அணியானது 106 ரன்களை எடுத்தது. இந்திய அணித்தரப்பில், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், சஹார் மற்றும் ஹர்சல் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகினார். விராட் கோலி 3 ரன்களில் வெளியேறினார். கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே அரைசதம் கடந்து 16.4 ஓவர்களிலேயே இந்திய அணியை வெற்றிப்பெற வைத்தனர்.
தென்னாப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் இந்திய அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டி அக்டோபர் 2-ம் தேதி கௌகாத்தி ஆடுகளத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.