அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதற்காகவும், ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவசர வழக்காக விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில், அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பே அழைப்பிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், தனக்கு நேற்று மாலைதான் அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.