இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவதை சுகாதாரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னையில் பெரும்பாலான மக்கள், முகக் கவசம் அணியாமல் கவனக்குறைவாகவும், அலட்சியத்துடனும் வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்ட மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் இருக்கும் 15 மண்டலங்களிலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, முகக் கவசம் அணியாத நபர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். சந்தைப் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மக்களை அனுமதிக்க வேண்டும். தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.