ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே சலசலப்புடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை வெடித்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுக்குழு மேடையிலேயே கூறினார். மேலும், தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத்தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஒற்றைத்தலைமை குறித்து முடிவு எடுத்த பின்பே 23 தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெறும் என கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் முழக்கமிட்டனர். இதையடுத்து நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், ஜூலை மாதம் 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டம் முடியும் முன்பே வெளியேறினர்.
ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்தது மட்டுமல்லாமல், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகவும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகவும், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சண்முகம் தாக்கல் செய்திருந்த இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கூடாது என்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும், அதன்பின் நடக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கு அந்த தீர்ப்பு பொருந்தாது. ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என இன்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதன் படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், பொதுக்குழு பிரச்சனைக்கு தனி நீதிபதியை நாடுமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.