மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவி ஸ்டான்ட் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக கீழே விழுந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுச் செல்லப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அக்குழந்தை அழைத்து வரப்பட்டது. இங்கு மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதன் காரணமாக குழந்தையின் உறுப்புகள் தானமாக கேட்கப்பட்ட நிலையில், துயரத்திலும் அக்குழந்தையின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தையின் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் 4 மாதக் குழந்தைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அதேபோல், குழந்தையின் சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது இளம்பெண்ணுக்கும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் இதற்கு முன்பாக இதுவரை மிகக் குறைந்த வயது உடைய உறுப்பு கொடையாளராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகளை தானமாக கொடுத்த இரண்டரை வயது குழந்தையே பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 மாதக் குழந்தையின் உறுப்புகளை தானமாகப் பெறப்பட்டுள்ளதால் இந்தக் குழந்தைக்கு இப்பெருமை சேர்ந்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா – வெளிவந்த ரிப்போர்ட்