புதிய முயற்சியாக சென்னையில் பழைய பொருள்களை வைத்திருப்பவர்கள் அவற்றை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தால் சென்னையில் பழைய பொருள்களை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் வரும் 14 ஆம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நாளை (இன்று) முதல் வழங்கலாம்.
இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள இன்சினரேட்டர் ஆலையில் எரியூட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் எரியூட்டும் பொருட்களில் புகை மண்டலமாக வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரஜினியின் படத்தில் மோகன்லால்? – இணையத்தை கலக்கும் தகவல்