ஏர் இந்தியா விமானம் ஒன்றில் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி மீது, குடிபோதையில் சிறுநீர் கழித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்றில் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் பயணியின் மீது குடி போதையில் ஒருவர் சிறுநீர் கழித்தார்.
குறிப்பாக விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது அந்த நபர் சிறுநீர் கழித்ததாகவும் அந்தப் பெண் பயணியின் உடை, பை மற்றும் காலணி ஆகியவை நனைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அவருக்கு மாற்று உடை வழங்கப்பட்டதாகவும் இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். மேலும், அந்த அநாகரீக செயலை செய்த அந்த நபர், விமானம் தரை இறங்கிய பின்னும், சுதந்திரமாக விமான குழுவினர் நடமாட அனுமதித்தாகவும் அந்தப் பெண் புகார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்ததாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விமான நிறுவனம் ஒரு குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்தப் பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடை பட்டியலில் சேர்க்க அந்தக் குழு பரிந்துரை செய்தது.
இந்த விவகாரம் தற்போது அரசு ஆய்வு குழுவிடம் இருப்பதாகவும், இந்தக் குழுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், நேற்று இரவு குற்றம் சாட்டப்பட்ட ஷங்கர் மிஸ்ரா என்ற அந்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவர் தில்லி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட ஷங்கர் மிஸ்ராவின் தந்தை, தனது மகன் பிளாக்மெயில் செய்யப்பட்டு பணம் கேட்டதாகவும், பணமும் அந்தப் பெண்ணுக்கு அனுப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகு அந்தப் பெண்ணின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் 72 வயதுடைய பெண்மணி என்றும், தனது மகனுக்கு அம்மாவை போன்றவர் என்றும் ஷங்கர் மிஸ்ராவின் தந்தை கூறினார். மேலும் தனது மகனுக்கு 34 வயது என்றும் அவருக்கு திருமணம் ஆகி 18 வயதுடைய மகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
போகி பண்டிகைக்கு சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி