உச்சநீதிமன்றத்தில் இருந்து ஐந்து நாள்கள் தற்காலிக ஜாமீனில் வெளிவந்துள்ள ஆல்ட் செய்தி நிறுவனத்தின் துணை நிறுவனர் முகமது ஜு பைர் மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி காவல் நிலையத்தில் ஆல்ட் செய்தி நிறுவனத்தின் துணை நிறுவனர் முகமது ஜு பைர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக 2018ம் ஆண்டு ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டதற்கு ஆல்ட் செய்தியின் துணை நிறுவனர் முகமது ஜுபைர் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.
தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முகமது ஜுபைர் மீது குற்றவியல் சதி, ஆவணங்களை அழித்தல், வெளிநாடு நிதிகளை பெற்றல் உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட முகமது ஜுபைர், நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகு, இந்திய-நேபாள எல்லையில் உள்ள நகரம் ஒன்றுக்கு, மேற்கட்ட விசாரணைக்காக காவல்துறையால் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், முகமது ஜுபைருக்கு கொலை மிரட்டல்கள் வருவதால், உச்சநீதிமன்றம் ஐந்து நாள்கள் தற்காலிக ஜாமீனில் விடுவித்துள்ளது. எனினும், இந்த வழக்கு முழுவதுமாக முடியும் வரையில் முகமது ஜுபைர், காவலில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, இரண்டு குழுக்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தியதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹமடி காவல் நிலையத்தில், ஜுபைர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக லக்கிம்பூர் நீதிமன்றம் ஜுபைருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது.
இந்த வழக்கில் முகமது ஜுபைரை ஆஜர் படுத்த வேண்டிய பொறுப்பு தில்லி காவல்துறைக்கு உள்ளதாக லக்கிம்பூர் கேரி நகரத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். சித்தப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை ஆஜராகும் முகமது ஜுபைர், இந்த வழக்குக்காக ஆறு நாள்களுக்கு நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து தப்பி ஓடினாரா அதிபர் கோட்டபய ராஜபக்சே?