கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும் என பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்த கருத்துக்கு பதில் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளது.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சமஸ் தனது சமூக வலைதளபக்கத்தில் பொன்னியின் செல்வன் சமந்தமான கருத்துகளை தெரிவித்தார்.
” கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும்; நானறிந்த வகையில் மேன்மையான மனிதர்; நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்! ” என்று சமஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் வெற்றிமாறன், ஜெய்பீம் திரைப்படத்துக்காக ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரை மேற்கொள்காட்டி எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு – அடையாள நிமித்தமாக அல்ல; கண்ணியமான தொகையாக வழங்கியுள்ளனர் என்பதையும் சமஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தெரிவித்த கருத்துக்கு பலவிதமான பதில் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது. அவற்றில் சிலவற்றை சமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதிலாக வந்த கருத்துகள்:
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு படைப்பு. இந்நிலையில், ஏன் கல்கி குடும்பத்துக்கு மணிரத்னம் பணம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதோடு ஜெய்பீம் திரைப்படத்தை பொன்னியின் செல்வன் திரைப்படத்தோடு ஒப்பிடுவது சரி இல்லை. வஞ்சிக்கப்பட்டவர்களின் கதையை திரைப்படமாக எடுத்து அதன்மூலமாக கிடைத்த பெரும் வருவாயில் சிறிய பகுதியை மட்டுமே அவர்களுக்கு தந்தனர்.
மேலும், “மணியோ யாரோயாயினும் படம் எடுத்து பிரபலப்படுத்தியதே அந்தக்கதைக்கு அவங்க செய்த பெரிய service. இன்னும் என்ன? கல்கியோட பேரன், பேத்தி, கோத்றம் குலத்தையெல்லாம் கூப்புட்டு ஆலத்தி சுத்தணுமாக்கும்? Worstraa
குப்பைக்கதை. அதைப்பார்க்கிறாப்போல ஒரு படம் எடுத்ததுக்கு அந்தக்குடும்பம்தான் மணிக்கு காவடி தூக்கணும்” போன்ற கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மேற்கூறிய பதிவுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பத்திரிகையாளர் சமஸ் “கடவுளே, தெரியாமல் எழுதிட்டேன்…மணி சாரைக் காப்பாற்று!“ என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது குறிப்பிடத்தக்கது.