இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியால், இலங்கையில் உணவு, சுகாதாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் விளைவாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டுமென போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
இதன்பின்னர், போராட்டக்காரர்களின் முற்றுகை காரணமாக கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான உடமைகள் இலங்கைக்கு சொந்தமான கடற்படை கப்பலில் ஏற்றப்படுவது போன்ற காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதிபர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறையும் ஆதரவாக செயல்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. சமீபத்தில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐநா நிர்வாகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஜூலை 11-ம் தேதி தீர்ப்பு