புதுச்சேரி அடுத்த பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளதாக அப்பகுதியை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளையும், கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தினையும் பார்வையிட்டார்.அப்போது அமைச்சர் உடன் இருந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு மோகன் அவர்கள் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து விளங்கியதோடு,மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறினார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியிலர் வசிக்கும் மக்களிடம் தங்களுடைய குறைகளை கேட்டறிந்த அமைச்சர், பின்னர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உணவு, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி புயல், கனமழையால் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அதன்படி பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களுக்காக இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க 14 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று கூறினார்.
மேலும் வீடுகளை இழந்து தவித்து வரும் மீனவ மக்களுக்கு சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலில் பட்டா வழங்கப்படும் என்றும், படகுகள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் அவைகள் கணக்கிடப்பட்டு உரிய நிவாரண உதவியும் வழங்கப்படும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட மீனவ வீடுகள்; ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ரங்கசாமி