உத்தர பிரதேச மாநிலத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 2 மாதக் குழந்தையை, குரங்கு தூக்கிச் சென்று மாடியில் இருந்து வீசிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அவை வீட்டுக்கு உள்ளேயும் சென்று இம்சைப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் சபர் எனும் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாதக் குழந்தை கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக குரங்குகள் கூட்டமாக வந்தன.
அதில் ஒரு குரங்கு குழந்தை தூங்கிக் கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே ஓடிச் சென்றது. குரங்கின் விடாப்பிடியால் குழந்தை அழத் தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்களும் குழந்தையின் குடும்பத்தினரும் ஓடிச் சென்று பார்க்கும்பொழுது, குரங்கு குழந்தையை வீட்டின் மேற்கூரைக்கு கொண்டுச் சென்றது.
குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பல முயற்சிகளை அங்கிருந்தவர்கள் மேற்கொண்டனர். இருப்பினும், அந்த முயற்சிகள் பலன் தராமல் போக, வீட்டின் மேற்கூரையில் இருந்து குரங்கு திடீரென குழந்தையை கீழே வீசியது.
இந்தச் சம்பவத்தில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதும், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குரங்கினால் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் இது தொடர்பாக வன துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தக கண்காட்சியில் ஸ்டால் குளறுபடி; கண்டனம் தெரிவித்த பதிப்பாளர்