கொரோனா வைரஸ் பரவலின் போது இந்தியா உள்பட பல உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனை, ஈடுகட்டும் வகையில் அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தி விட, இந்தியா முயற்சி செய்து வருகிறது.
கொரோனா வைரஸால் ஒருபுறம் பொருளாதாரம் நலிவடைய, மறுபுறம் உக்ரைன் – இரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பா நாடான ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று, சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இது, மூன்று நாள் பயணம். அங்கு, மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.
முதலில், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைத்ததை அடுத்து, இன்று ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். இரண்டு நாடுகளும், தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் பிரதமர் மோடி.
இந்தியா – ஜெர்மன் நாடுகளுக்கு இடையே நிகழும் 6-வது ஆலோசனை கூட்டம் இது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு, இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இந்திய மந்திரிகள் பலரும் ஜெர்மனிக்கு வர உள்ளனர். பிறகு, மந்திரிகள் தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியைத் தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் அழைத்ததன் பேரில், பிரதமர் மோடி மே மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோபன்ஹேகன் நகருக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் 2-வது இந்தியா – நோர்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர், கலந்து கொள்ள இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா வரும் வழியில், பாரிசில் சிறிது நேரம் தங்கி, பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், இந்த 3 நாள் சுற்றுப் பயணத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்ட உதவி பேராசிரியர்- போராடும் மாணவர்கள்!