புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன்தினம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பல குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.
மேலும் அம்மாநில எதிர்கட்சித் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா அவசர சிகிச்சை பிரிவு மூடிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஆஞ்சியோ கிராம் மிஷின், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வசதிகளும் பொதுமக்களுக்கு சரிவர கிடைக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தத் தகவலை அறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மருத்துவமனைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இவர் சிடி ஸ்கேன், ஆஞ்சியோ கிராம் மிஷின், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவர், செவிலியர், நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையத்தை ஆய்வு செய்தபோது, ஊழியர்கள் இல்லாமல் அந்த மையம் பூட்டியிருந்தது. மேலும் அதன் சாவியை வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைனைப் பார்த்த அவர் அதிகாரிகளை கடுமையாக கடிந்தார்.
மேலும் தமிழிசை, அவசர ஊர்தியிலிருந்து நோயாளியை ஊழியர்கள் இன்றி, உறவினர்களே இறக்கி சென்ற காட்சிகளை கண்டார். பிறகு அதிகரிகளிடம் இதுகுறித்து விசாரித்தார்.
இதையும் படிங்க: மோர்பி பால விபத்து; விசாரணையை தொடங்குகிறதா உச்சநீதிமன்றம்..?
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை பேசியதாவது:
அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. அதனை நான் ஒப்புக் கொள்கிறேன். இதனை சரி செய்ய நாளை அனைத்து கல்லூரி முதல்வர்களும், மருத்துவமனை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறேன். சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக 5 கோடி ரூபாயில் ஆஞ்சியோகிராம் இயந்திரம் பொருத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். அது ஒன்றரை மாதத்திற்குள் பொருத்தப்படும்.
எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், தனியார் மருத்துவமனையில் இருப்பது போன்று அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது. சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை அரசு மருத்துவமனை அதனை சரியான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நான் மருத்துவராக இருப்பதினால் இதனை சரி செய்யப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவ கல்வியில் முதல்முறையாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு தமிழில் பாடப்புத்தகங்கள்! டிசம்பரில் வெளியீடு