மோர்பி பாலம் விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 140-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த மோர்பி பாலத்தின் புனரமைப்புப் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. மேலும், கடந்த அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்ட இந்த பாலமானது அரசிடம் அனுமதி பெறாமல் திறக்கப்பட்டது. இந்நிலையில், இது சார்ந்து எழுந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம், அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி? வெளியான அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்