ட்விட்டர் வாங்கும் ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தம் முடிவடைந்திருந்த நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், எலான் மஸ்க் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்து கேட்ட தகவல்களை தராததாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர், எலான் மஸ்க்குடன் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடர திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
முகமது ஜுபைர் மீது மேலும் ஒரு வழக்கு!