இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமஸ்கிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ”உயர்வான அறிவு” என்றும் பொருள்படும்.
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன.
வேதங்களில் மோட்சம், என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலிப்பது வழக்கம். “மோட்சம் என்றால் என்ன?”
மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுவே பௌத்ததில் நிர்வாணா எனப்படுகிறது. வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறவில்லை எனில் பல பிறவிகள் எடுக்ககூடும் எனவும் கூறப்படுகிறது.
மோட்சம் என்றால் படைப்பில் இருந்து விடுதலை, உங்களிடமிருந்து விடுதலை. மோட்சம் என்றால் கடவுளிடம் செல்வது அல்ல. வாழ்க்கையில் நாம் விடுதலையை நோக்கிச் செல்கிறோம்.
எப்பொழுது ‘நான்’ என்பது இல்லாமல் போகிறதோ, அதுவே மோட்சம் எனப்படுகிறது. ‘நான்’ இருக்கும்போது, அங்கு மோட்சம் இருக்க முடியாது. காரணம் – ‘நான்’ என்பதன் இருப்பே எல்லைகளுக்கு உட்பட்டிருப்பதால் தான். இந்த அகண்ட வெளியில், நீங்கள் ‘நான்’ என்று சொல்வதே அதற்கென்று சில எல்லைகள் இருப்பதால் மட்டுமே. அதனால் ‘நான்’ என்பது இருக்கும் தடம் தெரியாமல் அழிய வேண்டும். இது நீங்கள் வளமான கற்பனைகளுக்குள் போகாமல் இருப்பதற்குத்தான். மோட்சம் என்பது இப்படியா? அல்லது அப்படியா? என்றால், மோட்சம் இது மாதிரியும் அல்ல, அது மாதிரியும் அல்ல. இதுவும், அதுவும், எதுவும் இல்லையென்றால் அதுதான் மோட்சம்.