ட்விட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காத வரையில் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தார். இதற்காக 44 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக எலான் மஸ்க் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். எலான் மஸ்க்கின் இந்த திடீர் ட்வீட் காரணமாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் சந்தையிலும் நேரடியாக எதிரொலித்துள்ளது.
அமெரிக்க சந்தைகள் இன்றைய தினம் நிறைவடையும் போது ட்விட்டர் நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டு 37.10 அமெரிக்க டாலரில் நிறைவடைந்தது. எலான் மஸ்க் தனது ட்வீட்டை பங்குச் சந்தை தொடங்கும் முன்னர் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ட்விட்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளது என அந்நிறுவனம் அறிக்கை தெரிவித்திருந்தது. இந்த கணக்கில் உடன்பாடு இல்லை எனக் கூறிதான் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் தான் ட்விட்டரை வாங்குவதில் உறுதியாக உள்ளேன் எனவும் விளக்கம் அளித்து ட்வீட் செய்தார்.
ட்விட்டர் நிறுவனம் இதுவரை அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குகளின் அடிப்படையில் வாங்கும் தொகை முன்வைக்கப்பட்டது.
நேற்று, 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை ட்விட்டர் சி.இ.ஓ பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அவர் அதை நிரூபிக்காத வரையில் இந்த ஒப்பந்தம் முன் நகராது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டுவருவது, நிறுவனத்தில் தொழில்நுட்ப ரீதியாக வேறு தளத்திற்கு கொண்டு செல்வது, நிறுவனத்தின் வருவாயை விளம்பரத்தை மட்டும் சார்ந்து அல்லாது பல வழிகளில் பெருக்குவது போன்ற பல்வேறு திட்டங்களை எலான் மஸ்க் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக் கோளின் துணை கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளைக் கண்டறிய புதிய முயற்சி!!