புதுச்சேரி: 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 டன் போதை வஸ்துகள் கொண்ட ஒரு கண்டெய்னர் உட்பட 4 வாகனங்களை புதுச்சேரி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் போதைப்பொருள் தடை செய்வதற்காக ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் தனி இயக்கத்தை காவல்துறை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் நகரம் மற்றும் கிராமத்தின் எல்லைகளில் போலீசார் நடத்திய சோதனையில் பெரும் அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த ஷாஜகான் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 35 லட்சம் ரூபாய் மற்றும் 650 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
ஷாஜகானுக்கு எங்கிருந்து குட்கா வருகிறது என்று விசாரித்த போது சென்னை திருமுடி நகரிலிருந்து குக்கா கிடைப்பதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சோதனை இட்டதில் ஒரு கண்டெய்னரில் புதுச்சேரிக்கு அனுப்ப குட்கா தயாராக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மேலும் மூன்று வாகனங்களில் குட்கா இருப்பதையும் கண்டுபிடித்து, அவற்றையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அனைத்தையும் புதுச்சேரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தையும் கோரிமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதில் குட்கா வியாபாரியான ரவி என்பவர் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை போலீசார் பிடித்த குட்காவில் இது அதிக அளவு என்று கூறப்படுகிறது. எட்டு டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா கூறுகையில், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 டன் மேலாக போதை வஸ்துகள் கொண்ட ஒரு கண்டெய்னர் உட்பட 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான கிரிக்கெட் வீரர்; தடை விதித்த இலங்கை