அரசாணை எண்.115க்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
இதற்கான அரசாணை எண் 115 கடந்த 18.10.2022 தேதி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த அரசாணைக்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து தமிழக அரசு அறிக்கை வெயிட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சரிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த முதலமைச்சர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு அவசியம்.! ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்