பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவரச சட்டம் கொண்டுவர கேரள அரசு முடிவுசெய்துள்ளது.
கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. மேலும் கேரள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
சமீபத்தில் அம்மாநிலத்தின் 9 துணை வேந்தர்களும் பதிவியிலிருந்து விலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் உத்தரவிட்டிருந்தார். இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆளுநரின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த வண்ணம் உள்ளது.
அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சட்டமன்றதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது கேரள பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. மேலும் அந்தப் பதவிக்கு நிபுணர் ஒருவரை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மாநில அரசுகள் எந்த அவசர சட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை: உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை..!