புதன்கிழமை இரவு 2:30 மணிக்கு பாகிஸ்தானின் பஞ்சாப், கைபர், பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், முல்தான், பாக்கர், பாலியா, பெஷாவர், மலகண்ட், மினாவாலி, பாக்பாட்டன் மற்றும் புனர் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
வலுவான இந்த நிலநடுக்கத்தினால் உண்டான இழப்புகள், பொருட்சேதங்களின் விவரங்கள் பற்றிய செய்திகள் தற்போது வரை வெளியாகவில்லை. அமெரிக்க நில ஆராய்ச்சி மையம் அளித்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள கோஸ்ட் பகுதியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில், 51 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான அதிர்வானது 500 கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள அனைத்து பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தானை ஒட்டி இருந்த இந்தியப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினையும் சேர்த்து ஆப்கானிய-பாகிஸ்தான் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ராவல்பிண்டி, கைபர் பகுதிகளில் இரண்டு நிலநடுக்கமானது ஏற்பட்டது.
கடந்த மாதமும் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் 5.2 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தினால் 80 வீடுகள் சேதமடைந்தன. 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடில்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டன.
சற்றுமுன் கிடைத்த தகவல்..
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தான் நாட்டில் 250 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. பக்திகா பகுதியில் வீடுகளை இழந்த மக்கள், மருத்துவமனைக்கு கொண்டுசெல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
‘நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. பல வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.’ என்று ஆப்கானிய அரசு செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலேசியா நாட்டிலும் நேற்று நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது அந்த நாட்டின் தலைநகரமான கோலா லம்பூரிலிருந்து 561கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தினால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.