தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதர நிலையங்கள் அமையவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் கொள்கைப்படி ஒர் ஊராட்சி ஒன்றியத்தில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார். அப்போது, தமிழகத்தில் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது ,தேவைகளை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது என்றார்.
மேலும், அவர் பேசியதாவது:
சட்டப்பேரவை அறிவிப்பு எண்-33-இன்படி, கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் மற்றும் அறிவிப்பு எண்-44 இன்படி, நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகர்ப்புறத்தில் 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பங்களாவை காலி செய்ய சொல்லி வந்த நோட்டீஸ்..மெஹபூபா செய்யப்போவது என்ன?