புதுச்சேரி தவளக்குப்பத்தில் அரசு கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தவளக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் ஓட ஆரம்பித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கன்னியகோவில் அருகே உள்ள காட்டுக்குப்பம் புதுநகர் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 18), டி.டி.ஆர். நகரை சேர்ந்த சொக்காராம் (19), அண்ணாமலை (28) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள், 3 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சிர்க்கையால் அச்சத்தில் மக்கள்..