திருப்பூர் மாவட்டத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆசிரமத்தில் 15 சிறுவர்கள் தங்கியிருந்தனர். அங்கு விடுதியில் உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அவிநாசி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாதேஷ் வயது 16, ஆதிஷ் வயது 8, பாபு வயது 13 ஆகிய மூன்று சிறுவர்கள் இறந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன்படி அளிக்கும் அறிக்கையை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவை பணியிடை நீக்கம் செய்து சமூக நலத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது, 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் அறங்காவலர் செந்தில் நாதன், வார்டன் கோபி கிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் மீது கவனக் குறைவுடன் செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது, இளம் சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு